தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

By manimegalai aFirst Published Nov 21, 2021, 1:18 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தில் இன்றும் நாளையும் 8 மாவட்டங்களில் கனமழையும், வரும் 24, 25 -ந் ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்

ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

நாளை கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கூடுதலாக டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் எனவும், மேலும் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!