அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து அரபிக்கடலில் உருவான புயலால் தமிழகத்தில் மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த புல்புல் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரையை கிடந்தது. இந்த நிலையில் புல்புல் புயல் தற்போது வலுவிழந்து இருப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: பெற்ற மகனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை..! குடிபோதையில் வெறிச்செயல்..!