சாமானியர்களை சம்பவம் செய்யும் எரிபொருள் விலை… தங்கம் போல் விலை அதிகரித்துவிட்டதாக வேதனை..!

By manimegalai aFirst Published Oct 24, 2021, 9:26 AM IST
Highlights

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.100-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.104-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.100-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.104-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று மெல்ல மெல்ல நீங்கிவரும் வேளையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையானது சாமனியர்களின் குரல்வலையை நெறித்துவருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் செல்லும் பெட்ரோல், டீசல் விலையால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொருத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் எரிபொருள் விலை சற்று குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர்களின் நிம்மதியை கெடுத்து எரிபொருள் விலை குரல்வலையை நெரிக்க தொடங்கியது.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் வரை குறைத்தது. ஆனாலும் அடுத்தடுத்த விலை மாற்றங்களால் அதன் பயனும் பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலையும் தங்கத்தின் விலையை போலவே ரெக்கை கட்டி பறக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.80-க்கு விற்பனையான டீசல், கடந்த 10 மாதங்களில் லிட்டருக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அதிலும் இம்மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் லிட்டருக்கு ரூ.5 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாகும்.

click me!