அம்மா உணவகத்தில் சப்பாத்திக்குப் பதில் தக்காளி சாதம் ஏன்..? சென்னை மாநகராட்சி சொன்ன விளக்கம்.!

By Asianet TamilFirst Published Oct 21, 2021, 8:51 AM IST
Highlights

சென்னை அம்மா உணவகங்களில் சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு உணவான சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டது சர்ச்சையானது. இதுபற்றி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 400 அம்மா உணவகங்கள், பொது மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் என 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தநிலையில் ஒரு சில காரணங்களால் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு 4 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு தற்போது 403 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த 403 அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லி மற்றும் பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதமும், இரவு வேளையில் சப்பாத்தியும் தரமாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடர்ந்து மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகளிலிருந்தும் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக ஒரு சில மண்டலங்களில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.
இதுபோன்று சப்பாத்தி வழங்குவதில் தடங்கல் ஏற்படுகிற நேரங்களில் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கும் நிகழ்வானது அவ்வப்போது நடைபெறுவது இயல்பான ஒன்றே. உதாரணமாக, 2020ஆம் ஆண்டு கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவி குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. ஒரு அம்மா உணவகத்திற்கு விற்பனையை கருத்தில்கொண்டு அதிகபட்சமாக 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பல அம்மா உணவகங்களில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மற்றும் பல அம்மா உணவகங்களில் பற்றாக்குறையுடனும் உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!