அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் நாடு முழுவதும் ஆன்லைன் வழி கல்விமுறையே பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும். 10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும். 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.