அடுத்து வரும் 10 நாட்கள் உஷாராக இருங்கள்.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Aug 27, 2021, 11:45 AM IST
Highlights

கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பண்டிகையால் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்தது போல் தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- ஒன்றிய அரசிடமிருந்து இந்த மாத தொகுப்பில் தற்போது வரை 63.76 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கூடுதலாக 5.89 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 16.75 லட்சம் தடுப்பூசியும் விரைவில் வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று, வரும் மாதத்திற்கு ஒன்றிய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளது. தற்போது நம்மிடையே கையிருப்பில் இருக்கும் 14 லட்சம் தடுப்பூசிகள் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தடுப்பூசிகளும் ஓரிரு நாட்களுக்குள் வந்துவிடும்என்று கூறினார்.

 

 நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

பக்கத்து மாநிலங்களுக்கு வேலைக்காக நாள்தோறும் சென்றுவரும் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டதால் நோய் இல்லை என்று மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்  என்று அறிவுறுத்தியுள்ளார்

click me!