பழிக்குப் பழி கொலைகள்.. கூலிப்படையினர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. டிஜிபி சைலேந்திர பாபு..!

By vinoth kumarFirst Published Sep 26, 2021, 10:56 AM IST
Highlights

தனிப்படையினர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு போட்டுள்ளோம். தமிழகத்தில் கூலிப்படையினர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். 

ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும்  'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், குறிப்பாகத் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகக் கொலை சம்பவங்கள் அதிகரித்தன. இது பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சட்டம் மற்றும் நீதி மீதான நம்பிக்கையை அசைக்கும் வகையில் அமைந்தன. இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில், தென் மாவட்டங்களின்  சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து 4 மாவட்ட எஸ்பிக்களுடன் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இதில், தென்மண்டல ஐஜி அன்பு, நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, எஸ்பிக்கள் நெல்லை மணிவண்ணன், தூத்துக்குடி ஜெயக்குமார், தென்காசி கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் கடந்த  52 மணி நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி  3,325 ரவுடிகளை கைது செய்துள்ளனர். 2012, 2013ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து திண்டுக்கல், நெல்லையில் பழிவாங்கும் வகையிலான கொலைகள் நடந்தன. இதனால் போலீசார் ரவுடிகளை கைது செய்ய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கூலிப்படையினர் மற்றும் பழிக்குப்பழியாக கொலைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடும் கும்பலை கண்காணிப்பதற்கும், கைது செய்வதற்கும் மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், தனிப்படையினர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு போட்டுள்ளோம். தமிழகத்தில் கூலிப்படையினர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். 

click me!