#BREAKING மார்ச் 22 முதல் மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு... 12ம் வகுப்பிற்கு மட்டும் அரசு வைத்த டுவிஸ்ட்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2021, 3:18 PM IST
Highlights

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பள்ளி மாணவர்களை அதிக அளவில் பாதித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தில் ஏற்படுத்தி வந்தது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வருகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் இன்று நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோல்  கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு 12,000 ரூபாயும், தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் விதித்து  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சில மாவட்டங்களில் சிறிய அளவில் இந்த தொற்று பள்ளிகளில் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் ஒட்டுமொத்த நாள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டாலும் தற்போது கோவிட் தொற்று பரவும் சூழ்நிலையில் இந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் கூட்டுத் தொற்றால் (COVID School Clusters) அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி பன்மடங்கு அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இதனை உடனடியாக தடுக்க, 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொதுத் தேர்வை எழுத வேண்டி உள்ளதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 12ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளை இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 

மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!