
பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சொகுசு வசதிகளை வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, மனைவி கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலையானார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சொகுசு வசதிகளை செய்து கொடுக்க 3 லட்சம் ரூபாய் அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சிறையில் சொகுசு வசதி செய்து தர ஜி பே மூலம் ரூ.25,000 அனுப்பியதாக தகவலும் வெளியானது. வைரலாகி வரும் ஆடியோவின் உண்மை தன்மை குறித்தும், விசாரணை நடத்தவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.