ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சிறு வணிகர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சிறு வணிகர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம், நகைகள், பரிசுப்பொருட்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில்,வியாபாரிகள் பொருட்களை வாங்க ரொக்கமாக எடுத்துச் செல்லும் பணத்தை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நேரில் சென்று கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பொருட்களை வாங்கச் செல்லும் வியாபாரிகள் அதிகமாக பாதிக்கப்படுவதாகக் கூறினார். இந்த விதிமுறையை 2 லட்சம் ரூபாய் எடுத்து செல்லும் வகையில் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் மொத்த விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் பொருட்களை சில இடங்களில் பறிமுதல் செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் பெரியளவில் பாதிப்படைகின்றனர். சிறு, குறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாக விக்கிரமராஜ தெரிவித்துள்ளார்.