திருமண பந்தத்திலிருந்து விலகிய பெண்கள் தனி ரேசன் கார்டு பெறுவது எப்படி..? விரிவாக விளக்கிய தமிழக அரசு.!

By Asianet TamilFirst Published Oct 25, 2021, 9:05 PM IST
Highlights

கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டவர்கள் அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவை வழங்கியுள்ளது.  அறிவுரைகளை வழங்கியுள்ளது.
 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், அவருடைய கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்க இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண்ணுக்குக் குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில், அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண், அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!