மே மாதத்தில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்..! ஜுன் மாதம் வெளியான மர்மம் என்ன?

By Selva KathirFirst Published Jun 7, 2021, 1:01 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனாவால் மே மாதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கப்பட்டு அந்த எண்ணிக்கை தற்போது ஜூன் மாத இறப்பு எண்ணிக்கையோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ள மர்மம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மே மாதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கப்பட்டு அந்த எண்ணிக்கை தற்போது ஜூன் மாத இறப்பு எண்ணிக்கையோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ள மர்மம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. 2வது அலையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவிற்கு 493 பேர் வரை உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால்  மே மாத மத்தியில் சுடுகாடுகளில் நீண்ட நேரம் காத்திருந்து கொரோனாவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்கும் நிலை இருந்தது. இந்த நிலை சுமார் ஒரு வாரம் நீடித்தது. ஆனால் அப்போது தெரிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் எரிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கையும் டேலி ஆகவில்லை என்கிற புகார் எழுந்தது.

இந்த நிலையில் மே மாதத்தில் உயிழந்த 163 உயிரிழப்புகள் கடந்த இரண்டு தின அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 450க்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழந்து  வருகின்றனர் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க  சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து தினசரி அரசு சார்பில் வெளியிடும் சுகாதாரத்துறை குறிப்பில் நோய் பாதிப்பு விபரம், உயிரிழப்புகளின் எண்ணிக்கை, உயிர் இழந்தவர்களின் விவரம் உள்ளிட்டவை வெளியிடப்படும்.

இந்நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியான அறிக்கையில் மே மாதம் உயிரிழந்தோரின் விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அன்றைய தினம் 443 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்  77 பேர் மே மாதத்தில்  உயிரிழந்ததாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 30பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மே 20ம் தேதிக்கு முன்னதாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது விவரம் நேற்றைய அறிக்கையில் தான் வெளியிட்டபட்டுள்ளது.

இதேபோன்று 4ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மே மாதம் உயிரிழந்த 86 பேரது விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 73பேர் தனியார் மருத்துவமனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். அதாவது மே மாதம் கொரோனா உயிரிழப்புகளில் சிலவற்றை அதிகாரிகள் மறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது சில உயிரிழப்புகளை மே மாத கணக்கில் காட்டாமல் ஜூன் மாத கணக்கில் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த மே மாதமே தினசரி உயிரிழப்புகளை சரியான அளவில் காட்டியிருந்தால் ஒவ்வொரு நாளும் நாட்டில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் இருந்திருக்கும் என்கிறார்கள்.

ஆனால் அப்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்த திமுக அரசு இதனை விரும்பவில்லை என்கிறார்கள். அதனால் தான் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் மே மாத எண்ணிக்கையை குறைத்து காட்டிவிட்டு தற்போது அந்த எண்ணிக்கையை ஜூன் மாதம் சேர்த்து காட்டுவதாக சொல்கிறார்கள். அதாவது முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தற்போது கொரோனா குறைய ஆரம்பித்துள்ளது. உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. எனவே மே மாதத்தில் மறைக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையையும் தற்போது சேர்த்து வெளியிட்டு வருகின்றனர் என்கிற புகார் எழுந்துள்ளது.

click me!