BREAKING: கோகுல் ராஜ் கொலை வழக்கு.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

By vinoth kumarFirst Published Jun 2, 2023, 2:45 PM IST
Highlights

சேலம் மாவட்டம், ஓமலூரை  சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம்  தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

சேலம் மாவட்டம், ஓமலூரை  சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம்  தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுக்களை  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின் சென்னையில் விசாரிக்கப்பட்டது. மதுரையில் விசாரணை நடந்த போது, இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து நீதிபதிகள் விசாரித்தனர்.

 

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து யுவராஜின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

click me!