சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே மின்சார ரயில்கள் 7 மாதம் ரத்து.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Jun 1, 2023, 10:56 AM IST
Highlights

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. 

ஜூலை 1ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. 

இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!