PS Raghavan Passed Away : மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை செயலாளர் பி.எஸ்.ராகவன் சென்னையில் காலமானார்

By Ganesh AFirst Published Apr 11, 2024, 9:29 AM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமைச்செயலாளர் பி.எஸ்.ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 97.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிறந்தவர் பி.எஸ்.ராகவன். இவர் கடந்த 1952-ம் ஆண்டு மேற்குவங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர் கடந்த 1961-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு செயற்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றார். இந்திய நாட்டின் பிரதமர்களான லால் பகதூர் சாஸ்திரி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் ஆட்சி காலங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார் பி.எஸ்.ராகவன்.

இவர் டெல்லியில் மத்திய உணவுத்துறையின் கூடுதல் செயலாளராக இருந்தபோது தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி கிடைக்க வழிவகை செய்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. பி.எஸ்.ராகவன் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சென்னையில் செட்டில் ஆனார். 

இதையும் படியுங்கள்... மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு விசிட்! அம்பையில் பொதுக்கூட்டத்துக்கு நாளை அடிக்கல்!

ஆங்கிலத்தில் பல்வேறு நூல்களை எழுதியுள்ள பி.எஸ்.ராகவன், தமிழ் நாளிதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் எழுதிய, நேரு முதல் நேற்று வரை என்கிற நூலுக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன. சென்னையில் உள்ள அடையாறு நேருநகரில் வசித்து வந்த பி.எஸ்.ராகவன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.

பி.எஸ்.ராகவனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் அவரது மகன் ஏற்கனவே இறந்துவிட்டார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பி.எஸ்.ராகவன் உயிரிழந்தர் நிலையில், அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவு குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடல் இன்று காலை 11.30 மணியளவில் பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. 

இதையும் படியுங்கள்... ஒரு தபால் வாக்கு கூட போட மாட்டோம்... தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கும் ஏகனாபுரம் மக்கள்!

click me!