பிட்டு படத்தை வெளியிடுவேன்! ஆதீனத்தை மிரட்டிய அகோரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி! கோர்ட்டில் நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Apr 10, 2024, 1:37 PM IST
Highlights

ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும் ரூ.40 கோடி தராவிட்டால் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பிப்ரவரி 21ம் தேதி அளித்தார். அதில் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும் ரூ.40 கோடி தராவிட்டால் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.  இந்த புகார் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையும் படிங்க: மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது மோதி சினிமா பாணியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்! 5 பேர் பலி! நடந்தது என்ன?

மேலும், ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த மார்ச் 16-ம் தேதி மும்பையில் பதுங்கியிருந்த இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தையும் கைது செய்தனர்.

இந்நிலையில் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி  தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்துக்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் தொடர்புடையை 5 பேர் தலைமறைவாக உள்ளனர். ஆகையால் அகோரத்திற்கு ஜாமீன் தரக்கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிங்க:  அந்த தாத்தா என்ன இப்படியெல்லாம் பண்ணாரு! தாயிடம் கதறிய மகள்! 67 கிழவனின் தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகோரத்திற்கு எதிரான 47 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் மறியல், மேடைப் பேச்சு உள்ளிட்டவைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சாதாரண வழக்குகள் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை வாதத்தை ஏற்ற நீதிபதி மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

click me!