வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அங்காங்கே மழை பெய்து வருகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அடுத்து வர உள்ள இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதன் பின்னர் ஏப்ரல் 14ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் 15ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி முதல் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.