இன்று மாலை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நெருங்கி வருகிறது. இதனால் நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட அதன் சுற்று வட்டாரங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே கடந்து செல்லும். இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட வாசிகள் மிகுந்த பதட்டத்தில் உள்ளனர்.
இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு துரிதப்படுத்தியுள்ளது. ஆழ்ந்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதோடு சாலைகளில் திடீர் பள்ளங்களும், அங்குள்ள மரங்களும் சாய்ந்து வருகிறது. தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியதால் மிக அதிக வேகத்தில் காற்றடித்து வருகிறது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.