ஆபத்து..! ஆபத்து..! டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு.!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 11:16 AM IST
Highlights

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- பொதுவாக வைரஸ் குறிப்பிட்ட கால இடைவெளியில் உருமாறிக் கொண்டே இருப்பது இயல்பு. அந்த வகையில், கொரோனா வைரஸ் அவ்வாறாக வீரியமடைந்துள்ளது. அதனை டெல்டா பிளஸ் வகை வைரஸ் என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அத்தகைய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும், அது வீரியமிக்கதாகவும், எளிதில் தொற்றக் கூடியதாகவும் உள்ளது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் அதுதொடர்பாக சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அதன்படி, டெல்டா பிளஸ் வகை பாதிப்புக்குள்ளான அனைவரது உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம். அவர்களது உடல் நிலை மோசமடைந்தால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்.

அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என அனைவரையும் கண்காணித்தல் அவசியம். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று டெல்டா வகை பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதன் வாயிலாக புதிய வகை வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். அனைத்து மாவட்டங்களும் இந்த அறிவுறுத்தல்களை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!