முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்... தமிழக அரசு கைக்கு போன முக்கிய முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2021, 7:05 PM IST
Highlights

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான வரம்பை அதிகரிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பை அதிகரிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரி நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர்,  முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்வதற்கு தற்போது ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது எனவும், அதன்படி யாரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக உள்ள  இத்தொகையை குறைந்தது ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

 

click me!