
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத் துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்வீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் செயல்பட்டு வரும் பாண்டியன் என்ற பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால் சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் சோதனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை மேற் கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை என்று தெரிவித்த்தார். அப்போது மனுதாக்கல் செய்துள்ள கிளப் மீது கிரிமினல் வழக்கு, பணம் வைத்து சூதாட்டம் நடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உத்தரவிட்டார். .மேலும் இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப் பதிவு துறை ஐஜியை, தன்னிச்சையாக சேர்த்து உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவர் சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளை நடைபெறுகிறதா எற ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது சம்மந்தப்பட்ட கிளப்புகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.