மின் கட்டணம் வசூலிக்க இடைகாலத் தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 12:20 PM IST
Highlights

ஊரடங்கால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஐ எட்டியிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 31 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருக்கும் நிலையில் 1,409 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்தில் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து என அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் மக்கள் அவதிக்குள்ளாகியிருப்பதால் தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர் ஊரடங்கு அமலில் இருப்பதால் மின் கட்டணத்தை செலுத்துவதில் விலக்கு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மின் கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும் தற்போது உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க கூறிய நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசும், மின்சாரத்துறையும்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

click me!