
சென்னையில் இயங்கி வரும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, 1,000 ஊழியர்களுக்கு ஒரு வார கால லண்டன் பயணத்தை ஸ்பான்சர் செய்துள்ளது. இது, அந்நிறுவனத்தின் வருடாந்திர போனஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாகிராண்ட் (Casagrand) நிறுவனத்தில் இந்தியா மற்றும் துபாய் முழுவதும் பணியாற்றும் சுமார் 7,000 ஊழியர்களில் இருந்து, சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களில் 1,000 ஊழியர்கள் இந்தப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் சுமார் 15% பேர் லண்டன் சுற்றலா செல்ல உள்ளனர்.
ஊழியர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் இந்தச் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணங்கள் ஊழியர்களுக்கு ஒரு விடுமுறையுடன் மகிழ்ச்சியான அனுபவத்தையும் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, துபாய் மற்றும் ஸ்பெயின் போன்ற சர்வதேச சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளனர்.
லண்டன் பயணத்திற்காக, ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, முன்னணி விமான நிறுவனங்களுடன் இணைந்து போக்குவரத்து மற்றும் தங்குமிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்கள் எந்தப் பதவி அல்லது தரத்தில் இருந்தாலும், அனைவரும் ஒரே விதமான கவனிப்புடன் ஒன்றாகப் பயணித்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு வார பயணத் திட்டத்தில் செயின்ட் பால்ஸ் கதீட்ரல், லண்டன் பாலம், பிக் பென், பக்கிங்ஹாம் அரண்மனை, பிக்காடில்லி சர்க்கஸ், ட்ரஃபல்கர் சதுக்கம், மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் மற்றும் தேம்ஸ் நதியில் படகுப் பயணம் போன்ற புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வெற்றியே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தி என்றும், இதுபோன்ற அர்த்தமுள்ள வெகுமதிகள் பணியில் ஊக்கத்துடன் செயல்பட உதவுகின்றன என்று இந்த நிறுவனம் கூறுகிறது.