திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி... காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!

By Asianet TamilFirst Published Oct 28, 2021, 9:28 PM IST
Highlights

அமெரிக்கா, சிங்கப்பூர் சிகிச்சைகளுக்குப் பிறகு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் மருத்துவ ஆலோசனைகளை ரஜினி பெற்று வருகிறார். திடீரென போயஸ் கார்டனுக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 நடிகர் ரஜினிகாந்துக்கு இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதற்காக டெல்லிக்கு சென்றிருந்தார். விருதைப் பெற்ற அடுத்த நாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தான் விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தார்.

 ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாக தயாராகிவிட்ட நிலையில், அப்படத்தின் காட்சியை தனது குடும்பத்தினர் மற்றும் பேரக் குழந்தைகளுடன் ரஜினி இன்று கண்டு மகிழ்ந்தார். இந்நிலையில் இன்று மாலைக்கு மேல் நடிகர் ரஜினி சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. அமெரிக்கா, சிங்கப்பூர் சிகிச்சைகளுக்குப் பிறகு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் மருத்துவ ஆலோசனைகளை ரஜினி பெற்று வருகிறார். திடீரென போயஸ் கார்டனுக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இது வழக்கமான பரிசோதனைதான் என்று ரஜினியின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லதா கூறுகையில், “ஒவ்வோர் ஆண்டும் ரஜினிக்கு முழு உடல் பரிசோதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் ரஜினி  இருப்பார். ரஜினி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் “ என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா வட்டாரத்திலும் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!