குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை விடவே முடியாது… மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 5:50 PM IST
Highlights

வருவாய் துறை மற்றும் அறநிலைய துறை இடையே ஏற்பட்ட குளறுபடிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் நிலத்தை ஆக்கிரமித்ததாக தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

வருவாய் துறை மற்றும் அறநிலைய துறை இடையே ஏற்பட்ட குளறுபடிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் நிலத்தை ஆக்கிரமித்ததாக தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

சென்னை பூந்தமல்லியை பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் பூங்கா அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாஅக் கடந்த 2015-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு நிலத்திற்கான குத்தகை தொகையை வழங்கும்படி குயின்ஸ்லேண்ட் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, குயின்ஸ்லேண்ட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 1995-ம் ஆண்டில் 21 ஏக்கர் நிலம் செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய் துறையினர் கோயில் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்துவிட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்டு குயின்ஸ்லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோயில் நிலத்திற்கான குத்தகை உரிமையும் 1998ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதாவும், அப்போது இருந்தே குயின்ஸ்லேண்ட் நிறுவனம் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வருவாய் துறைக்கும், அறநிலைய துறைக்கும் இடையே உள்ள பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குயின்ஸ்லேண்ட் நிறுவனம், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த குற்றத்திற்காக குயின்ஸ்லேண்ட் நிறுவனம், ஒரு கோடியே 8 லட்சம் ரூபாயை வருவாய் துறைக்கு செலுத்த வேண்டும். அதேபோல் கோயிலுக்கு ரூ.9.5 கோடி ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கோயில் நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தை நடத்திவரும் ராஜன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலமானது வருவாய் துறைக்கு சொந்தமானதா? அல்லது அறநிலைய துறைக்கு சொந்தமானதா என இதுவரை முடிவு செய்யப்படவில்லை. அதனால் அறநிலையத் துறை மூலம் எங்களை வெளியேற்றுவது தவறு. சம்மந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்த பின்னரே, தங்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாத் உபாத்தியாயா மற்றும் சத்திக்குமார் குமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் அந்த நிலம் கோயிலுக்கு தான் சொந்தம். விவசாயம் செய்வதற்காக குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் வேளாண் பணிகளும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

click me!