95 வயது தாயை சாலையில் வீசிய கொடூர மகன்கள்.. 4 பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் கேட்பாரற்று போன அவலம்..!

By Manikandan S R SFirst Published Oct 3, 2019, 3:49 PM IST
Highlights

ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் செங்குந்தபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பட்டம்மாள். வயது 95. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு சண்முகம், சதாசிவம் என்ற 2 மகன்களும் இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். அனைவரும் தனித்தனியாக வசித்து வரும் நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பட்டம்மாளை மகன்கள் சரிவர கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மிகவும் உடல் நலிவுற்று இருந்த அவரை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துள்ளார்.

பல நாட்களாக அங்கே இருந்து வந்த பட்டம்மாள் மகன்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அவரை அவரது மகன்கள் இருவரும் விரட்டி உள்ளனர். இதனால் தனது மகள் சகுந்தலா வீட்டிற்கு பட்டம்மாள் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் அவரை வைத்திருந்த சகுந்தலா மீண்டும் தனது சகோதரர் சண்முகத்தின் வீட்டு திண்ணையில் கொண்டுபோய் போட்டு விட்டு வந்து இருக்கிறார்.

உடனே சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் மூதாட்டி பட்டம்மாளை போட்டு விட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சதாசிவம் தாய் பட்டம்மாளை சாலையில் கிடத்திவிட்டு சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுசம்பந்தமாக அந்த பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சதாசிவம் மற்றும் சண்முகம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 பிள்ளைகள் பெற்றும் யாரும் இறுதி காலத்தில் கவனிக்காத நிலையில் இருக்கும் மூதாட்டி பட்டம்மாளின் நிலைமை குறித்து அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

click me!