
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி படநிலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைவேல். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பவருக்கும், கார்த்திகைவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இருவரும் முதல் மனைவிக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த முதல் மனைவி கவிதா, கணவர் கார்த்திகைவேலுவை கண்டித்துள்ளார். இந்நிலையில் அபிநயா சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல் சென்னையில் கார்த்திகைவேல் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து கார்த்திகைவேல் அபிநயாவை சென்னையில் வைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி கவிதா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி. கார்த்திகைவேல், அபிநயா ஆகிய இருவரையும் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கார்த்திகைவேல் மற்றும் அபிநயா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.