2001ல் நடந்தது மாதிரி ஏதாவது அதிசயம் நடக்குமா..?

By karthikeyan VFirst Published Aug 12, 2018, 3:33 PM IST
Highlights

2001ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டெழுந்ததை போல ஏதாவது சம்பவம் நடந்தால் மட்டுமே லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க முடியும். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒருநாள் தாமதமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தொடக்கத்திலிருந்தே ரன்களை குவிக்க தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை குவிக்க அந்த அணி தயங்கவில்லை. தொடர்ச்சியாக சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. 

131 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவின் அருமையான ஆட்டத்தால் மீண்டெழுந்தது. 6வது விக்கெட்டுக்கு 189 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. 93 ரன்களில் பேர்ஸ்டோ அவுட்டானார். இதையடுத்து வோக்ஸுடன் சாம் கரண் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் கரண் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை குவித்துள்ளது இங்கிலாந்து அணி. 

இந்திய அணியை விட 250 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணி படுதோல்வியடையாமல் மீண்டெழ வேண்டுமானால், இந்திய வீரர்கள் நிலைத்து ஆட வேண்டும். 

2001ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியில், டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து இந்திய அணியை மீட்டெடுத்ததுபோல, மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். அப்படியான இன்னிங்ஸை ஆடவில்லை என்றால் இன்னிங்ஸ் தோல்வி உறுதி. 

2001ம் ஆண்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 171 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபாலோ ஆன் பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் டிராவிட்டும் லட்சுமணனும் அருமையாக ஆடினர். லட்சுமணன் 281 ரன்களையும் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 657 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

274 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவிற்கு 384 ரன்களை இலக்கா நிர்ணயித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

எனவே அந்த போட்டியில் டிராவிட்டும் லட்சுமணனும் ஆடியது போன்று, பொறுப்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும். எப்படியும் இனி வெற்றி பெறுவது கடினம் என்றாலும் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். 
 

click me!