பவுண்டரி லைனிலிருந்து கரெக்டா ஸ்டம்பில் அடித்த விஜய் சங்கர்!! டெய்லரை தெறிக்கவிட்ட டேரக்ட் த்ரோ.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 9, 2019, 10:28 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமான ரன் அவுட் ஒன்றை செய்து, உலக கோப்பைக்கு முன்னதாக தேர்வாளர்களின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் சங்கர். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விஜய் சங்கரின் துல்லியமான த்ரோவில் டெய்லர் ஆட்டமிழந்தார். பேட்டிங், பவுலிங்கிற்கு அப்பாற்பட்டு ஃபீல்டிங்கிலும் மிரட்டி, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் சங்கர். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் - தோனி ஜோடி பொறுப்பாக ஆடி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தது. 19வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அபாரமான ரன் அவுட் ஒன்றை செய்து, உலக கோப்பைக்கு முன்னதாக தேர்வாளர்களின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் சங்கர். நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, புவனேஷ்வர் குமார் 19வது ஓவரை வீசினார். 

அந்த ஓவரின்போது சாண்ட்னெரும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தை சாண்ட்னெர் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு, அவரும் டெய்லரும் ரன் ஓடினர். அந்த பந்தை வேகமாக ஓடிச்சென்று பிடித்த விஜய் சங்கர், பவுண்டரில் லைனிலிருந்து மிக துல்லியமாக ஸ்டம்பில் அடித்தார். விஜய் சங்கர் விட்ட த்ரோ, நேரடியாக ஸ்டம்பில் அடித்துவிடும் என்பதை அறிந்த புவனேஷ்வர் குமார், அந்த பந்தை கையில் பிடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது ரன்னை ஓடிய டெய்லர், விஜய் சங்கரின் அபாரமான த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

விஜய் சங்கரின் மிக துல்லியமான த்ரோவால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியடைந்து அவரை வெகுவாக பாராட்டினர். ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், பேட்டிங் - பவுலிங்கை கடந்து ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

click me!