அவரு மட்டும் இல்லைனா நான் காணாமல் போயிருப்பேன்!! மனம் திறக்கும் தமிழக வீரர்

By karthikeyan VFirst Published Feb 18, 2019, 1:26 PM IST
Highlights

அந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குள்ளாக அதிலிருந்து மீண்டெழுந்து நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி, உலக கோப்பையில் தனது பெயர் பரிசீலிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் விஜய் சங்கர். 
 

நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணிக்கான வீரர்களில் தீவிரமாக பரிசீலிக்கப்படும் விஜய் சங்கர், தனக்கு நம்பிக்கையளித்து தன்னை வளர்த்துவிட்ட நபர் குறித்து மனம் திறந்துள்ளார். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர், உலக கோப்பைக்கான அணியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் அணியில் இணைந்தார் விஜய் சங்கர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார். 

ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், உலக கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வில் தனது பெயரையும் பரிசீலிக்கும் வண்ணம் செய்துவிட்டார். பவுலிங் போட அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றாலும் ஓரளவிற்கு வீசினார். ஆனால் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்தார். 

விஜய் சங்கர் நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடியதன் விளைவாக, உலக கோப்பை அணிக்கான 2-3 வீரர்களுக்கான பரிசீலனையில் விஜய் சங்கரின் பெயரும் உள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். அந்த போட்டியில் விஜய் சங்கரின் ஆட்டம், அவரது தன்னம்பிக்கையை தளர செய்தது. எனினும் அந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குள்ளாக அதிலிருந்து மீண்டெழுந்து நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி, உலக கோப்பையில் தனது பெயர் பரிசீலிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் விஜய் சங்கர். 

இதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்று கூறியுள்ளார் விஜய் சங்கர். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பல இளம் திறமைகளை உருவாக்கி தருவதோடு, பல வீரர்களை புது மனிதர்களாக்கி அனுப்பியுள்ளார். அந்த வகையில் டிராவிட்டின் பயிற்சியில் இந்தியா ஏ அணியில் ஆடிய விஜய் சங்கரும் அதன்பிறகு திறமையில் பெரியளவில் மேம்பட்டுள்ளார். 

நியூசிலாந்துக்கு ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ஆடிய தனக்கு, ராகுல் டிராவிட் தன்னம்பிக்கையளித்ததாக கூறியுள்ளார். பெரிய ஷாட்டுகளை என்னால் முடியும், எனது மனநிலை மற்றும் பேட்டிங் திறன் ஆகியவற்றால் என்னால் சிறந்த ஃபினிஷராக திகழமுடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்த டிராவிட், என்னை ஐந்தாம் வரிசையில் இறக்கிவிட்டு அதை நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் உறுதியும் செய்தார் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!