
ஐசிசி பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் ஐந்து இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேலும், 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் பெற்று கம்பீரமாக நிற்கிறது.
இந்த நிலையில், ஐசிசி யு-19 உலகக் கோப்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் உலகக் கோப்பை போட்டியில் 261 ஓட்டங்கள் அடித்த இந்திய கேப்டன் பிருத்வி ஷா, 252 ஓட்டங்கள் விளாசிய இறுதி ஆட்ட நாயகன் மஞ்சோத் கல்ரா, 372 ஓட்டங்கள் குவித்த தொடர் நாயகன் சுபம் கில் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 14 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுகுல் ராய், 9 விக்கெட்டுகள் சாய்த்த கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 6 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணிக்கு, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ரேனார்ட் வான் டான்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் மொத்தமாக 348 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
ஐசிசி அணிக்கான 12-வது வீரராக உலகக் கோப்பை போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகளின் அலிக் அதானேஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி யு-19 உலகக் கோப்பை அணி (பேட்டிங் ஆர்டரில்):
பிருத்வி ஷா, மஞ்சோத் கல்ரா, சுபம் கில் (இந்தியா), ஃபின் ஆலன் (நியூஸிலாந்து), ரேனார்ட் வான் டான்டர் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), வன்டிலே மக்வேது (விக்கெட் கீப்பர், தென் ஆப்பிரிக்கா), அனுகுல் ராய், கமலேஷ் நாகர்கோடி (இந்தியா),
ஜெரால்டு கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா), காய்ஸ் அகமது (ஆப்கானிஸ்தான்), ஷாஹீன் அப்ரிதி (பாகிஸ்தான்), அலிக் அதானேஸ் (மேற்கிந்தியத் தீவுகள்).
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.