தற்போதைய இந்திய அணி தான் கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போதைய இந்திய அணி தான் கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. கடைசி போட்டி இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது.
டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மூன்றாவது போட்டியில் வென்றபிறகு, தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் தகுதிவாய்ந்த பெஸ்ட் டிராவலிங் அணி என சாஸ்திரி தெரிவித்திருந்தார். நான்காவது போட்டியில் தோற்றபிறகு, பெஸ்ட் டிராவலிங் டீம் என வாயில் மட்டுமே பேசாமல் செயலில் காட்ட வேண்டும் என சாஸ்திரிக்கு சேவாக் பதிலடி கொடுத்திருந்தார்.
ரவி சாஸ்திரி மீது சேவாக், கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடக்கூடிய அணியாக தற்போதைய இந்திய அணி தான் திகழ்கிறது என மீண்டும் தெரிவித்தார்.
இந்நிலையில், ரவி சாஸ்திரியின் கருத்தை கேட்டு கடுப்பான கவாஸ்கர், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், 1993ம் ஆண்டுக்கு பிறகு 2015ம் ஆண்டுவரை இலங்கையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. ஆனால் அந்த காலக்கட்டங்களில் பல்வேறு நாடுகளில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டிராவிட் தலைமையிலான இந்திய அணி 2007ல் தொடரை வென்றது. அதேபோல டிராவிட் தலைமையிலான இந்திய அணி 2005ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரையும் தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
வெளிநாடுகளில் இந்திய அணி பெற்ற தொடர்ச்சியான வெற்றிகளுக்கு ஒரு கேப்டனாக டிராவிட்டின் பங்களிப்பு குறைவு என்றாலும், அந்த அணி வலிமையானதாக இருந்ததால்தான் அது சாத்தியமானது. அதை மறந்திருந்தால் ரவி சாஸ்திரிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.