இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இடையே இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அவர் தொடர்ச்சியாக ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி முத்தரப்பு தொடரில் வங்கதேச வீரர் தமீம் இக்பாலிடம் இலங்கை வீரர் குணதிலகா ஒழுங்கீனமாக நடந்ததாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக அவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் எந்தமாதிரியான ஒழுங்கீன செயல்கள் என குறிப்பிடப்படவில்லை.
வீரர்கள் தங்கும் அறையில் வெளிநபர்கள் தங்கக்கூடாது என்பது விதி. அப்படியிருக்கையில், குணதிலகாவின் அறையில் அவரது நண்பர், நார்வே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரின் பேரில் குணதிலகாவின் நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் நடந்தபோது குணதிலகாவும் அந்த ஹோட்டலில் இருந்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் அந்த அணியின் ஸ்பின் பவுலர் நைட் கிளப் சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இந்நிலையில், குணதிலகாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.