கழட்டிவிடப்பட்ட ரோஹித்.. ஆஸ்திரேலிய தொடரில் ஆடுவாரா..?

By karthikeyan VFirst Published Nov 15, 2018, 9:49 AM IST
Highlights

டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 

முதலில் டி20 தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இருவரும் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக அதற்கு முன்னதாக நியூசிலாந்து ஏ அணியுடன் இந்தியா ஏ அணி மோதும் 4 நாள் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. நியூசிலாந்தில் நடக்கும் இந்த போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ள ரோஹித் சர்மா, முரளி விஜய், ரஹானே, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல் ஆகிய 6 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இவர்கள் நியூசிலாந்துடன் ஆடிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிடுவர். இவர்களில் ரோஹித் மட்டும்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றுவிதமான அணிகளிலும் இடம்பெற்றிருப்பதால், வரும் 21ம்  தேதி தொடங்கும் டி20 போட்டியில் ஆட வேண்டியிருப்பதால், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் ஆடிவிட்டு ஆஸ்திரேலியா செல்வதாக இருந்தது. மேலும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை வைத்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பிடிப்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டது. 

இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் அந்த போட்டியில் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து ஆடியதால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முரளி விஜய், ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் இடம்பெற்றிருப்பதால் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்பில்லை. மேலும் நடுவரிசையிலும் புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல் இருப்பதால் ரோஹித்துக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 
 

click me!