விராட் கோலிக்கு விஸ்வநாதன் ஆனந்தின் பயனுள்ள அட்வைஸ்

By karthikeyan VFirst Published Nov 13, 2018, 4:25 PM IST
Highlights

நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்ற ரசிகரின் கருத்தை சுட்டிக்காட்டிய கோலி, அந்த ரசிகருக்கு மிகக்கடுமையாக பதிலடி கொடுத்தார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனுமான கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. 

அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் அண்மையில் சிக்கினார் கோலி. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் கோலி.

பின்னர் இதற்கு பதிலளித்த கோலி, என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்? நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதிலளித்தார். 

ரசிகரின் கருத்துக்கு கோலி பதிலளித்த விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் கோலிக்கு கண்டனங்கள் குவிந்தன. கோலியின் நிதானமற்ற பதிலடியை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், விராட் கோலி கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டுப் பேசி இருக்கிறார். என்னைக் கேட்டால், அந்த ரசிகர் கூறிய கருத்தை , மனதில் ஏற்றிக்கொண்டு அதன்பின் பொறுமையாக பேசி இருக்கலாம். அதுபோன்ற மனநிலைதான் அவருக்குச் சரியாக இருக்கும். விளையாட்டில் நாம் பல்வேறுபட்ட மனநிலை உடையவர்களை பார்க்கிறோம். ஆதலால் பொறுமையாக இருப்பது சரியாக இருக்கும். விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். உணர்ச்சிவசப்படுவது அனைவரின் இயல்புதான். நானும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழக்கும்போதுதான் விளைவுகளை சந்திக்க நேர்கிறது. விராட் கோலி பேசியது பற்றி போதுமான அளவிற்கு விமர்சிக்கப்பட்டு முடிந்துவிட்டது. எனவே கோலியின் பேச்சு பிடிக்காமல் அவரை விமர்சித்தவர்கள், மீண்டும் மீண்டும் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

click me!