இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. துணிச்சலாக அடித்து ஆடும் ராகுல்!!

By karthikeyan VFirst Published Sep 11, 2018, 5:06 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 464 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டும் இந்திய அணியின் ராகுல் துணிச்சலாக அடித்து ஆடிவருகிறார். 
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 464 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டும் இந்திய அணியின் ராகுல் துணிச்சலாக அடித்து ஆடிவருகிறார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் கடைசி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

தொடரை இழந்த இந்திய அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் குக் மற்றும் ரூட் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடிக்க, அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

464 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான், புஜாரா, கோலி ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேற 2 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றது இந்திய அணி. இப்படியொரு கடும் இக்கட்டான நிலையிலிருந்து ராகுல் - ரஹானே ஜோடி இந்திய அணியை மீட்டெடுத்தது. நான்காம் நாளான நேற்றைய ஆட்டம் முடிய இருந்த சமயத்தில் அடித்து ஆடினார் ராகுல். ரஹானே நிதானமாக ஆட, ராகுல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 46 ரன்களுடனும் ரஹானேவும் களத்தில் இருந்தனர்.

இன்றைய ஆட்டம் தொடங்கியது முதல் ராகுல் ரன்களை குவிப்பதில் குறியாக இருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரிகளை அடித்தார். ரஹானே நிதானாமாகவே ஆடிவந்தார். ஆண்டர்சன், பிராட், சாம் கரன் ஆகியோரால் இந்த ஜோடியை பிரிக்கமுடியவில்லை. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அரைசதம் கடந்த ராகுல், தொடர்ந்து இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆடினார். ஏற்கனவே விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு, இலக்கும் அதிகம். எனவே எப்படியும் இழக்கப்போகும் விக்கெட்டை பயனில்லாமல் இழப்பதற்கு அடித்து ஆடி ரன்களை சேர்க்கலாம் என்ற முடிவில் ராகுல் அடித்து ஆடினார். 

4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்களை சேர்த்தது. 106 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்த ரஹானே மொயின் அலியின் பந்தை அடித்து ஆட நினைத்து ஜென்னிங்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி, பென் ஸ்டோக்ஸின் பந்தில் டக் அவுட்டானார். 

இதையடுத்து ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ராகுல் 74 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களுடன் ஆடிவருகிறது. 

click me!