தனி ஒருவனாக இந்திய அணியை தூக்கி நிறுத்திய புஜாரா அபார சதம்!! புஜாரா இல்லைனா புட்டுகிட்டு போயிருக்கும்

By karthikeyan VFirst Published Dec 6, 2018, 1:22 PM IST
Highlights

தனி ஒரு நபராக அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார் புஜாரா. 
 

தனி ஒரு நபராக அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார் புஜாரா. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ராகுலும் முரளி விஜயும் வழக்கம்போல சொதப்பினர். பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடி நம்பிக்கையளித்த இருவருமே இந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 

ராகுல் 2 ரன்களிலும் முரளி விஜய் 11 ரன்களிலும் வெளியேற, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 3 ரன்னில் நடையை கட்டினார். அண்மைக்காலமாகவே நன்றாக ஆடாமல் சொதப்பிவரும் ரஹானே, இந்த இன்னிங்ஸிலும் வெறும் 13 ரன்களில் வெளியேறினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜாராவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானமாக ஆட, மறுமுனையில் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார்.  இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துவந்த நிலையில், அவசரப்பட்டு ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 61 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, நாதன் லயனின் ஸ்பின் பவுலிங்கை தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட்டும் 25 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே புஜாரா அரைசதம் கடந்தார். புஜாராவுடன் அஷ்வின் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அஷ்வின் புஜாராவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ரன்களை சேர்த்தார். 76 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் அடித்த அஷ்வின் கம்மின்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் சற்றும் அசராமல் நிதானமாக ஆடிய புஜாரா, விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்துவந்ததால், 90 ரன்களை கடந்ததும் ஆக்ரோஷமாக அடித்து ஆடினார். அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி விளாசி சதத்தை பூர்த்தி செய்தார் புஜாரா. இது புஜாராவின் 16வது டெஸ்ட் சதமாகும். 

இக்கட்டான சூழலில் தனி ஒரு வீரராக களத்தில் நின்று அபாரமாக ஆடி சதமடித்து, அணியையும் மீட்டெடுத்த புஜாரா, சதமடித்த பிறகு ஆக்ரோஷமாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வேகவேகமாக ரன்களை சேர்த்தார். எனினும் முதல் நாள் ஆட்டம் முடிய இருந்த நிலையில், கடைசி பந்திற்கு முந்தைய பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் புஜாரா. 123 ரன்களை குவித்து புஜாரா ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 250 ரன்கள் எடுத்துள்ளது. 
 

click me!