கோலிக்கு ஓய்வு..? கேப்டன் யார்..? மிடில் ஆர்டரில் இறங்கப்போவது யார்..?

By karthikeyan VFirst Published Sep 1, 2018, 9:52 AM IST
Highlights

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும். 

செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வு மும்பையில் இன்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைபெறுகிறது. பிசிசிஐ அலுவலகத்தில் இந்த வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. 

கடந்த இரண்டரை மாதங்களாக இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இதையடுத்து ஆசிய கோப்பை, அதற்கடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வந்து ஆடுகிறது, அதன்பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆடுகிறது. இவ்வாறு இந்திய அணிக்கு தொடர்ந்து போட்டிகள் இருப்பதால், தொடர்ச்சியாக ஆடிவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்படாவிட்டால், அதன்பிறகு ஓய்வு அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். 

தொடக்க வீரர்களாக தவானும் ரோஹித்தும் களமிறங்குவர். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், அந்த இடத்தில் ராகுல் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மிடில் ஆர்டரில் இருக்கும் சிக்கலை தீர்க்கும் வகையில் அணி தேர்வு இருக்கும். யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் யோ யோ டெஸ்டில் தேர்வான அம்பாதி ராயுடுவிற்கு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்தியா பி அணியில் சிறப்பாக ஆடிய மனீஷ் பாண்டே, தொடர்ந்து திறமையை நிரூபித்து வரும் மயன்க் அகர்வால் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

விக்கெட் கீப்பர் தோனியுடன் அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவுடன் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!