இம்ரான் கான் பிரதமரானதுமே கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி!!

By karthikeyan VFirst Published Aug 21, 2018, 11:48 AM IST
Highlights

இம்ரான் கான் பிரதமரானதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த நஜம் சேதி, தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

இம்ரான் கான் பிரதமரானதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த நஜம் சேதி, தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். இதையடுத்து இம்ரான் கானுடன் ஏற்கனவே மோதல் இருந்ததன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த நஜம் சேதி ராஜினாமா செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நஜம் சேதியை நியமித்தார். 2013ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு நஜம் சேதி உறுதுணையாக இருந்ததாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்த நஜம் சேதி, இம்ரான் கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. 

அதற்கு பிறகு இருவரும் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். 2013ம் ஆண்டு நவாஸ் ஷெரிப்பால் கிரிக்கெட் வாரிய தலைவராக்கப்பட்ட நஜம் சேதியின் பதவிக்காலம் 2017ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. எனினும் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் 2020ம் ஆண்டு வரை அவரே தலைவராக நீடிக்கச் செய்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதை அடுத்து, தான் வகித்து வந்த கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை நஜம் சேதி ராஜினாமா செய்தார். நஜமின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக எஹசன் மணியை நியமித்துள்ளார்.
 

click me!