நியூஸிலாந்து அணி 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தானை வென்று தொடரைக் கைப்பற்றியது.
இதன்மூலம் அந்த அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி. கடந்த 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றுவது இது முதல் முறையாகும்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச தீர்மானிக்க, முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 83.4 ஓவர்களில் 271 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் ஜீத் ராவல் அதிகபட்சமாக 55 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 67 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆஸம் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 55 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 85.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 369 ஓட்டங்களுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் சமி அஸ்லாம் 91 ஓட்டங்கள் விளாசினார். கேப்டன் அஸார் அலி 58 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
பாபர் ஆஸம் 16, சர்ஃப்ராஸ் அகமது 19, யூனிஸ் கான் 11, சோஹைல் கான் 8 என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஆஸாத் சஃபிக், முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், இம்ரான் கான் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் அணி 230 ஓட்டங்களுக்கு சுருண்டது. முகமது ரிஸ்வான் 13 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் நியூஸிலாந்து அணி 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் நீல் வாக்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டிம் செளதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.