சிறந்த வீரர் டிவில்லியர்ஸா, விராட் கோலியா என்ற கேள்விக்கு மழுப்பாமல், தன் பார்வையில் யார் சிறந்த வீரர் என ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி பதிலளித்துள்ளார்.
இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில், ரஷீத், ரஹ்மான், முகமது நபி ஆகிய திறமையான ஸ்பின்னர்கள் இருக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் பவுலிங்கை இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர். அதிலும் ரஷீத் கான், ரஹ்மானின் பந்துவீச்சை பறக்கவிட்டனர்.
போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன்கள் குவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சை ஆடிவருகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கு மழுப்பாமல் நேரடியாக நெற்றி பொட்டில் அடித்தாற்போல முகமது நபி பதிலளித்துள்ளார்.
டிவில்லியர்ஸ் - கோலி.. இருவரில் யார் சிறந்த வீரர்? என்ற கேள்விக்கு சிறிது நேரம் யோசித்துவிட்டு டிவில்லியர்ஸ் என நபி பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் லாரா, ஆகிய இருவரில் மிகவும் பிடித்த வீரர் யார்? என்ற கேள்விக்கு சச்சின் என நபி தெரிவித்துள்ளார்.