கோலிக்கு எல்லாருமே எதிர்ப்பு.. ஆனால் கோலி யாரை வெறுத்து ஒதுக்குனாரோ அவர் மட்டும்தான் ஆதரவு!!

By karthikeyan VFirst Published Dec 29, 2018, 6:08 PM IST
Highlights

கோலியின் கருத்திலிருந்து ரோஹித், தோனியெல்லாம் கூட முரண்பட, கோலி யாரை வேண்டவே வேண்டாமென்று ஒதுக்கினாரோ அவர் கோலியின் கருத்தை ஆதரித்துள்ளார். 

உலக கோப்பை அடுத்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 19ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் முடிந்த 11 நாட்களில் உலக கோப்பை தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் முடிந்து உலக கோப்பையில் ஆடுவதற்கு குறைந்தது 15 நாட்கள் இடைவெளி தேவை என்று பிசிசிஐ வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய அணிக்கு முதல் போட்டி ஜூன் 5ம் தேதிக்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் கோலி பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்து, அதனால் உலக கோப்பையில் ஆட முடியாத சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு ஐபிஎல் சீசன் முழுவதும் விலக்கு அளிக்க வேண்டுமென கோலி கோரிக்கை விடுத்திருந்தார். 

ஆனால் கோலியின் கருத்திலிருந்து ரோஹித் சர்மா மற்றும் சேவாக் ஆகியோர் முரண்பட்டனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித், தங்கள் அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அவர் கண்டிப்பாக ஐபிஎல் தொடர் முழுவதும் ஆடுவார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சேவாக், 2 மாதம் வீரர்கள் ஆடாமல் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறார்கள்? வீரர்கள் காயமடைந்திருந்தாலோ அல்லது முழு உடற்தகுதியில் இல்லாமல் இருந்தாலோ இதுபோன்ற கோரிக்கையை வைக்கலாமே தவிர வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது போட்டிகளில் ஆடலாம் என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் ஆடப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளிலும் உடற்தகுதி நிபுணர்கள் இருக்கிறார்கள் எனும்போது அவர்கள் ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதே பிசிசிஐ-யின் கருத்தாக இருந்ததாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடர் முழுவதும் ஆடுவார்கள் என்று பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் இதில் இருந்த குழப்பம் விலகியது.

இதற்கிடையே சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட தோனி, கோலியின் கருத்திலிருந்து முரண்பட்டார். அதுகுறித்து பேசிய தோனி, ஐபிஎல்லில் நான்கு ஓவர்கள் பந்துவீசுவதால் பவுலர்கள் சோர்வடைந்து விடமாட்டார்கள். சொல்லப்போனால், அந்த நான்கு ஓவர்களில் அவர்களின் சிறந்த பவுலிங்கை வீச முடியும். நெருக்கடியான நேரங்களில் பல வித்தியாசமான பந்துகளை வீசலாம். அதுவே ஒரு பயிற்சியாக அமையும். பவுலர்களின் உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றில்தான் கவனம் செலுத்த வேண்டும். என்னை பொறுத்தவரை பவுலர்கள் மேலும் சிறப்பாக வீசுவதற்கு ஐபிஎல் ஒரு பயிற்சிக்களம் மற்றும் அதுதான் பயிற்சிக்கான காலமும் கூட என்று தோனி தெரிவித்தார். 

இவ்வாறு கோலியின் கருத்திலிருந்து ரோஹித், தோனியெல்லாம் கூட முரண்பட, கோலி யாரை வேண்டவே வேண்டாமென்று ஒதுக்கினாரோ அவர் கோலியின் கருத்தை ஆதரித்துள்ளார். கோலியின் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டியதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். கும்ப்ளேவை பயிற்சியாளராக வேண்டாமென்று ஒதுக்கியதே கோலி தான். ஆனாலும் கும்ப்ளே ஆதரிக்கிறார் என்றால், அதுதான் முதிர்ச்சி. கோலி தன்னை ஓரங்கட்டினார் என்பதற்காக அவருக்கு எதிரான கருத்தை கூறாமல், கோலி கூறியதிலிருந்த நியாயத்தை கருத்தில்கொண்டு அவர் கூறியது சரிதான் அதை பரிசீலிக்க வேண்டும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.  
 

click me!