நாங்க சொதப்புனது அந்த விஷயத்துல தான்.. அது மட்டும் நடந்திருந்தால் நாங்கதான் கெத்து!! தோல்விக்கு பின் கோலி

By karthikeyan VFirst Published Feb 25, 2019, 1:23 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேற, அதன்பிறகு ராகுலும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவசரப்பட்ட கோலி ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் அரைசதம் அடித்ததும் 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் அதனால் பலனில்லை. டெத் ஓவர்களில் தோனியை ரன் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.

முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட்டை மொத்தமாக கட்டுப்படுத்தினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்ததும் இதற்கு ஒரு காரணம். எனினும் தோனி களத்தில் நின்றும் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. தோனி கடைசிவரை நிராயுதபாணியாகவே களத்தில் நின்றார். 

127 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றியை நழுவவிட்டுள்ளது. 

போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி, 150 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அப்படியான ஆடுகளம்தான் இது. ஆனால் நாங்கள் பேட்டிங் சரியாக ஆடாததால் இது மிகக்குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணி எங்களை விட நன்றாக ஆடியது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று கோலி தெரிவித்தார். 
 

click me!