உலக கோப்பைக்கு அவரு இல்லாம போக வாய்ப்பே இல்ல!!

By karthikeyan VFirst Published Feb 19, 2019, 10:16 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தான் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் எடுத்து உறுதி செய்துள்ளது தேர்வுக்குழு.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. 

டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார். பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் இணைந்தார் ராகுல்.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்தார் ராகுல். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ரோஹித் - தவான் நிரந்தர தொடக்க ஜோடி உள்ளதால் ஆடும் லெவனில் ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும் அணியில் இருப்பார்.

 

இந்நிலையில், உலக கோப்பையில் ராகுலுக்கான வாய்ப்பு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கு ரிசர்வ் தொடக்க வீரர் இல்லாமல் செல்லக்கூடாது. அதனால்தான் கேஎல் ராகுல் மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் எடுக்கப்பட்டார். அவரது ஆட்டத்தை இந்த தொடரில் உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் உலக கோப்பைக்கு முன்னதாக அவர் ஃபார்மில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 
 

click me!