ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூருக்கு முதல் தோல்வியை பரிசளித்தது புனே சிட்டி...

First Published Dec 11, 2017, 9:18 AM IST
Highlights
IsL Pune City to give first defeat to Jamshedpur


இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 21-வது ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் வீழ்த்தி அந்த அணிக்கு முதல் தோல்வியை அளித்தது எஃப்சி புணே சிட்டி அணி.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 21-வது ஆட்டம் புணே - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது.

இந்த ஆட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் தனது முதல் கோலுக்கு முயற்சித்தது. ஆனால், அதனை புணே கீப்பர் தடுத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் இஸு அஸுகா, புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஆகியோர் விதிகளை மீறியதாக, மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 30-வது நிமிடத்தில் புணே அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. அதனை அந்த அணியின் ஆதில் கான் அடித்தார். இதனால் புணே 1-0 என முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து 44-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி தனது கோலை அடித்தது. அந்த அணியின் இஸு அஸுகா, சக வீரர் அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்தார்.  ஆனால். அது விதிகளை மீறிய வகையில் இருந்ததாகக் கூறி, அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறாக முதல் பாதியில் புணே முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதியில் புணே தடுப்பாட்டத்தை மேற்கொண்டு ஜாம்ஷெட்பூருக்கு கோல் வாய்ப்புகள் வழங்காமல் பார்த்துக் கொண்டது.

ஆட்டத்தின் இறுதியில் புணே 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த சீசனில் முதல் முறையாக களம் கண்டுள்ள ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை ஐந்து ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் தனது சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

tags
click me!