
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சாய்னாவுக்குப் பிறகு தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறிய இரண்டாவது இந்திய வீராங்கனை சிந்து ஆவார். இதுதான் சிந்துவுக்கு அதிகபட்ச தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.
21 வயதான சிந்துவுக்கு கடந்த சீசன் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், அதன்பிறகு சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் வாகை சூடினார்.
அதைத் தொடர்ந்து ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய சிந்து, உலக சூப்பர் சீரிஸ் பைனலுக்கும் தகுதி பெற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, இப்போது தரவரிசையிலும் ஏற்றம் கண்டுள்ளார்.
இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 18-ஆவது இடத்திலும், ஸ்ரீகாந்த் 21-வது இடத்திலும், எச்.எஸ்.பிரணாய் 23-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி ஜோடி 24-ஆவது இடத்தில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.