பக்கா டீம் ஒர்க்.. கடைசி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!! 4-1 என தொடரை வென்று அசத்தல்

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 3:27 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு அணியாக சிறப்பாக ஆடி கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 
 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என ஒருநாள் தொடரை வென்றது. 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு அணியாக சிறப்பாக ஆடி கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், ராயுடு - விஜய் சங்கர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. விஜய் சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேதர் ஜாதவும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி தன் பங்கிற்கு 34 ரன்களை எடுத்து கொடுத்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா, இந்திய அணி 252 ரன்களை எட்ட உதவினார். 

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்துவிட்டது. ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. அதன்பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் - டாம் லதாம் ஜோடி ரன் சேர்ப்பதில் அவசரப்படாமல் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அவர்கள் மெதுவாக போட்டியை இந்திய அணியிடமிருந்து பறித்து சென்ற வேளையில், வில்லியம்சனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். அதன்பிறகு டாம் லதாம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். 

இதையடுத்து போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பிய நிலையில், ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, மீண்டும் போட்டியை இந்திய அணியிடமிருந்து எடுத்து சென்றார். புவனேஷ்வர் குமார் வீசிய 36வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 4 பவுண்டர்கள், 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி இந்திய அணியை மிரட்டிவந்த நீஷமை, தோனி ரன் அவுட் செய்தார். 

கேதர் ஜாதவ் வீசிய 37வது ஓவரின் இரண்டாவது பந்து, நீஷமின் கால்காப்பில் பட்டது. அதற்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். அந்த பந்து நீஷமின் கால் காப்பில் பட்டு தோனியின் காலில் பட்டு பின்னால் கிடந்தது. தோனி அம்பயரிடம் அப்பீல் செய்வதில் பிசியாக இருக்கும் தருணத்தை பயன்படுத்தி ரன் ஓடலாம் என்று நினைத்த நீஷம், கிரீஸை விட்டு சற்று நகன்றிருந்தார். அவர் கிரீஸிலிருந்து விலகியிருந்ததை கண்ட தோனி, உடனடியாக பந்தை எடுத்து ரன் அவுட் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத நீஷம், மிகுந்த அதிருப்தியுடன் நடையை கட்டினார். 

நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு சாண்ட்னெரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த, கடைசி விக்கெட்டுக்கு ஹென்ரியுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட பிறகும் கூட ஹென்ரி 2 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அது பெரிய பாதிப்பாக அமையவில்லை. கடைசி விக்கெட்டாக போல்ட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்த, இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீஷமின் ரன் அவுட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளிக்க, ஒரு அணியாக இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 4-1 என தொடரை வென்றது. 
 

click me!