ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், எந்த பவுலரின் பவுலிங்கை எதிர்கொள்ள அஞ்சினார் என்பதை பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட், அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான கில்கிறிஸ்ட், அதிரடியான பேட்ஸ்மேனும் கூட. கில்கிறிஸ்ட் - ஹெய்டன் தொடக்க ஜோடி, அந்த அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி.
1996ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தொடங்கிய கில்கிறிஸ்ட், 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார். 2008ல் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். மூன்று உலக கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் இடம்பெற்றிருந்தார்.
அவர் ஆடிய காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, பல வெற்றிகளுக்கு காரணமானவர் கில்கிறிஸ்ட். 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5,570 ரன்களையும் 287 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9,619 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்காகவும் ஆடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், யாருடைய பந்தை எதிர்கொள்ள அஞ்சினார் என்பது தொடர்பாக இப்போது பகிர்ந்துள்ளார் கில்கிறிஸ்ட். இதுதொடர்பாக பேசியுள்ள கில்கிறிஸ்ட், முரளிதரனின் பவுலிங்கிற்குத்தான் அஞ்சினேன். அவர் இரண்டு புறமும் பந்தை சுழலவிடுவார். அவரது பந்தை கணிக்க முடியாமல் திணறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.