மும்பை அணியின் கேப்டன் ரஹானே.. மீண்டும் டெல்லி அணியின் கேப்டன் ஆனார் காம்பீர்!!

By karthikeyan VFirst Published Sep 16, 2018, 10:27 AM IST
Highlights

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திரா, ஹைதராபாத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொள்கின்றன. 

இதில், மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால், இவர்கள் இருவரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஆடுகின்றனர். 

அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து காம்பீர் விலகினார். இந்நிலையில், இம்முறை மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

காம்பீர் தலைமையிலான டெல்லி அணியில் ரிஷப் பண்ட், நிதிஷ் ராணா, உன்முக்த் சந்த், ஹிம்மத் சிங், மனன் ஷர்மா, பவன் நேகி உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 
 

click me!