
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது ஆஸ்திரேலியா அணி.
புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ஓட்டங்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சுருண்டு நின்றது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்று மார்ஷ் 31 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள்.
ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித், அபாரமாக ஆடி 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். இந்தியாவில் அவர் எடுக்கும் முதல் சதம் இதுவே.
இதன்பின்னர் 109 ஓட்டங்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித்.
வழக்கம்போல அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்கள் அடித்த ஸ்டார்க், 30 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
பிறகு லயன் விக்கெட்டை உமேஷ் யாதவும் ஓ’கீஃப் விக்கெட்டை ஜடேஜாவும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. .
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாகவே இருந்தது. தொடக்க வீரர்களான விஜய் 2 ஓட்டங்களிலும் ராகுல் 10 ஓட்டங்களிலும் வீழ்ந்தனர். இதன்பிறகு இந்திய அணியின் சரிவு உறுதியானது.
கோலி (13), ரஹானே (18), அஸ்வின் (8), சாஹா (5) ஆகியோர் தகுந்த இடைவெளிகளில் பெவிலியன் திரும்பினார்கள்.
இந்த இன்னிங்ஸிலும் ஓ’கீஃப் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். அவருடைய சுழற்பந்துவீச்சுக்கு இந்திய அணியினரால் ஈடுகொடுக்க முடியாதது என்பது எதிர்பார்த்தே ஒன்றே.
2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 28.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.
புஜாரா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னமும் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணி இன்னமும் 341 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போதே 5 விக்கெட்டுகள் எடுத்து அசைக்கமுடியாத சக்தியாக விளங்கினார் ஓ’கீஃப்.
ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியபோது முதல் ஓவரிலேயே புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஓ கீஃப். அதிகபட்சமாக புஜாரா 31 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்பிறகு ஒரே ஓவரில் ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் லயன். இதன்பிறகு கடைசி விக்கெட்டையும் லயன் வீழ்த்தி இந்திய அணியின் மோசமான பேட்டிங்குக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தார்.
இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 33.5 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு மரண அடி வழங்கியது.
தற்பொது, ஆஸ்திரேலியா நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.